×

2 சிறுமிகளுக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை கன்னித்தன்மை பரிசோதனை, தற்கொலை முயற்சி என்பது பொய்யான குற்றச்சாட்டு: தமிழ்நாடு டிஜிபி விளக்கம்

சென்னை: சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி, இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப் படவில்லை. சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் பொய்யான தகவல் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பழிவாங்கும் நோக்குடன் சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் வைத்ததாகவும், அதன் அடிப்படையில் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், 6, 7வது வகுப்பு மாணவியர் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் இரு விரல் கன்னி பரிசோதனை செய்ததாகவும், இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன.

இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் ச/பி 368(ஏ) மற்றும் குழந்தை திருமண சட்டப் பிரிவு 9, 10ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.

ஆனால் அவர்கள் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்த சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல், அதுபோன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை. நான்கு குழந்தை திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கும் ஆதாரங்கள் இருந்தன என்பதால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்பது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. அதோடு இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் பொய்யான குற்றச்சாட்டு. இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 2 சிறுமிகளுக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை கன்னித்தன்மை பரிசோதனை, தற்கொலை முயற்சி என்பது பொய்யான குற்றச்சாட்டு: தமிழ்நாடு டிஜிபி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,DGP ,CHENNAI ,Tamilnadu ,
× RELATED குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஜாமீன்...